Saturday, 10 November 2012

தீபாவளி

வருடா வருடம் தீபாவளி எங்களுக்கு  ஒருவாரம் முன்னதாக ஆரம்பித்துவிடும்..வீட்டின் அருகில் இருக்கும் சிவன் கோவிலில் திருக்கல்யாண வைபம் மூன்று நாட்களுக்கு முன்னதாக துவங்கும்...

அந்நாட்களில் மட்டும் பள்ளியிலிருந்து அவசரமாக வருவோம்....வீட்டிற்கு வந்ததும் நானும் தங்கையும் ஆளுக்கு ஒரு முழுப்பெட்டி வெடிகளை தனியாக எடுத்து வைத்திருப்போம்....

அம்மா மிலிட்டரி கேண்டினிலிருந்து முந்திய சனிக்கிழமை வாங்கி வந்து விடுவார் அதில் வெடிகள் எனக்கும் மத்தாப்புகள் தங்கைக்கும் அவளுக்கு என்னிடம் இருக்கும் வெடிகளும் வேண்டுமென்பாள் அதனால் சண்டை வரும்...எங்கள் வெடி பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதே ஒரு உலக சாகசம்...

புதையல் காக்கும் பூதம் போல் இருப்போம்....ஒவ்வோரு நாட்களுக்கும் தேவையானதை பிரித்து வைத்து பக்காவாக தயாராவோம்.....திருக்கல்யாணத்திற்கு புதுத்துணி உண்டு அம்மாவோ இல்லை பெரியம்மாவோ வாங்கித்தருவார்கள்...

புது டிரவுசரின் ஒரு பையின் திரி கிள்ளிய பிஜிலி வெடிகளும் மற்றொரு பையில் தீப்பெட்டியும் 25 பைசா ஊதுபத்தி பாக்கெட்டுமாக சப்பரத்திற்கு முன்னாக செல்வோம்.....ஒவ்வொரு தெரு முக்கிலும் அணுகுண்டு அல்லது லக்ஷுமி வெடி உண்டு....

திருக்கல்யாணத்திற்கும் தீபாவளிக்கும் இடையில் உள்ள இரண்டு நாட்களுக்கு கோயில் ஊஞ்சல் ஆதலால் எந்த விசேஷமும் இருக்காது தீபாவளிக்கு முந்திய நாள் மாலை முதல் வரிசையாக வெடி வெடிப்போம் கரண்டு போஸ்ட் ஓட்டை,பாலடைந்த வீட்டின் தாழ்பால் ஓட்டை என எங்கும் எப்பொழுதும் வெடி வைப்போம்

வெடி காலியாகாமல் இருக்க நானும்,தேவா,விஜய்,சந்தோஷ் என வரிசையாக வைப்போம் இரவு 10 மணிக்கு கடைசி வெடி என்னுடையதாக இருக்கும் இல்லை தேவாவினுடையதாக இருக்கும்...

அதன் பின் நள்ளிரவு யார் வெடி வெடிப்பது என்ற போட்டி உண்டு பெரும்பாலும் அம்மாவும் அப்பாவும் மைசூர்பா,பர்ஃபி,முறுக்கு,சீடை,தேங்குழல்,மிச்சர் உக்காரை ( இது மட்டும் சுவைக்க தீபாவளி அன்று தான் தருவார்கள்) என செய்ய உக்கார அவர்களை வேடிக்கை பார்த்து 12 மணிக்கு அவசரமாக ஓடிச்சென்று அவர்களின் வீடருகில் சத்தமாக வெடிக்க 2 அணுகுண்டுகளை இணைத்து வெடிக்க வைத்து யாரும் வரும் முன் வீட்டிற்கு வந்து விடுவேன்...

மறுநாள் காலை எண்ணெய் தேய்த்து குளித்து அப்பாவும் தங்கையும் முதல் சரத்தை வெடிப்பார்கள் அன்று முழுவதும் வெடி தீர்ந்து அவள் மாலை என்னிடம் வெடி கேட்க சண்டை வந்து அவளுக்கு கிப்ட் பாக்ஸ்  கிடைக்கும் இரவு ரிஷபவாகனம் துவங்கும் பொழுதும் முடியும் பொழுதும் கட்டாயமாக எனது சரம் இருக்கும்....

தீபாவளி அன்று யார் வீட்டில் அதிக வெடி போட்டார்கள் எனபதை மாலை மிஞ்சும் குப்பைகளே முடிவு செய்யும்...

வெடிக்காத வெடிகள்,மற்றும் மிஞ்சிய வெடிகளைக்கொண்டு ஒரு ஆராய்சியே நடக்கும் அட்டையில் பொதிப்பது..மண்ணுக்குள் புதைப்பது என கார்த்திகை வரை நீளும்.,..கார்த்திகை அன்று சொக்கப்பனை கொளுத்தும் பொழுது மொத்தமாக நாங்களும் எங்கள் ஏவுதளத்தில் ( பழைய டயர் )வெடிப்போம்...

நாங்கள் வைக்கும் ராக்கெட் அல்லது வித்தியாசமான வெடிகளினால் மயிரிலையில் எரிவதிலிருந்து தப்பித்துள்ளன வைக்கோற்போர்களும் அதிகம்....

பத்தாம் வகுப்பில் தீபாவளிக்கடுத்த நாள் பள்ளி வைத்தார்கள் எனபதற்காக பள்ளியில் சரம்,பிஜிலி.ஓலை,மற்றும் கல் வெடி போட்டது அதிகம் கல் வெடி பாறை உடைக்க பயன்படும் என்று அதன் சத்ததினால் 12 வகுப்பு வரை நம்பியிருந்தேன்....

இப்பொழுது தீபாவளி எதற்காகவோ வருகிறது புத்தாடையுடன் போகிறது...

No comments: